January 20, 2013

சென்னை புத்தகத் திருவிழா- பார்ட் 2


கடந்த ஞாயிறு குடும்பத்துடன் புத்தகக் கண்காட்சி சென்று குழந்தைகள் தொடர்பான புத்தகங்கள் வாங்கியாகிவிட்டது. அதில் பார்பி & பென்டென் மொம்மை (சுவரில் ஒட்டுவது) மிஸாகி, ஒரு வாரமாக குழந்தைகள் படுத்தி எடுத்துவிட்டார்கள்.

நேற்று பதிவர் சத்ரியன் ( Gopal Kannan) அவர்களின் கண்கொத்திப் பறவை கவிதைப் புத்தக அறிமுக விழா, நமது டிஸ்கவரி புக் பேலஸ் ஸ்டால் (ஸ்டால் எண் 43 & 44 ) முன் ஏற்பாடகி இருந்தது. கூடவே நமது மின்னல் வரிகள் பாலகணேஷ் அண்ணனின் சரிதாயணம் @ சிரிதாயணம் நகைச்சுவை கதைகள், மற்றும் பதிவர் நண்பர் கவியாழி கண்ணதாசன் அவர்களின்  அம்மா நீ வருவாயா! அன்பை மீண்டும் தருவாயா? என்ற கவிதைப் புத்தகமும் அறிமுகம் செய்யப்பட்டது.

சத்ரியனின் கண்கொத்திப் பறவை அறிமுக வெளியீடு
கேபிள், புலவர்,முரளிதரன்






கவியாழி கண்ணதாசனின் அம்மா நீ வருவாயா! அன்பை மீண்டும் தருவாயா?  கவிதை புத்தகம் அறிமுக வெளியீடு. மெட்ராஸ்பவன் சிகக்குமார் & கவியாழி கண்ணதாசன். பின்னனியில் தமிழ்அமுதன்(ஒயிட் &பிளாக் டி-சர்ட்) பாலகணேஷ், நான்,முரளிதரன், கேபிள் சங்கர் & கவிஞர் மதுமதி.

பாலகணேஷ் அண்ணனின் சரிதாயணம் @ சிரிதாயணம் புத்தக அறிமுக வெளியீடு. கவியாழி கண்ணதாசன், நான், கேபிள் சங்கர், பாலகணேஷ், புலவர், அஞ்சா சிங்கம்.


நான் மதியம் சாப்பாடு முடிந்து, நேராக மெட்ராஸ்பவன் சிவக்குமார் வீடு சென்றுவிட்டேன் அங்கே, டெர்ரர் பதிவர் ஆரூர் மூணா செந்தில் ஏற்கனவே அங்கே உக்கார்ந்து டீ சாப்பிட்டு கொண்டிருந்தார். சிவாவின் அம்மா எனக்கும் டீ குடுத்தார்கள். சக பதிவர்களின் பெயர்கள் அவர்களுக்கு தெரிந்திருக்கிறது, போன வாரம் புத்தகண்காட்சியில், என் பையனை தொலைத்து மீட்ட கதை கேட்டார்கள். பயபுள்ளை எல்லாத்தையும் அம்மவிடம் ஒப்பித்துவிடுவாம் போல் இருக்கிறது. சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தோம், சிவா ஒரு பெண் பின்னாடி சுற்றுவதாகவும் விரைவில் கால்கட்டு போட்டுடனும்னு சொன்னோம், என்னிடம் அப்படி யாரையாச்சும் கூட்டிட்டு வந்தாலும் சந்தோசம் என்று சொன்னாலும், பிறகு சிவாவுக்கு மண்டகப்படி நடந்திருக்க வாய்ப்பிருக்கிறது, ஆனாலும் ஒத்துக்கொள்ள மாட்டான்.

புத்தகக் கண்காட்சியில் நேற்று நுழைவு டிக்கெட் எடுப்பதற்கே நீண்ட வரிசை இருந்தது. எங்களுடன் பதிவுலகின் மற்றுமொரு ரெட்டையர்களான பிலாஸபி பிரபாகரன் & அஞ்சா சிங்கம் செல்வின் இருவரும் சேர்ந்து கொண்டார்கள். ஸ்டால் எண் 1 லிருந்து ஆரம்பித்து 43& 44 டிஸ்கவரி வந்ததும் அங்கே தெரிந்த முகங்கள் இருக்கிறதா என்று பார்த்தோம், பதிவர் கே ஆர் பி செந்தில் தனது இரு பையன்களுடன் நின்றிருந்தார். பையன்கள் பக்கத்துக் கடையில் அஞ்சாரு புத்தகங்களை (கலரிங், ட்ராயிங் )ஆசையோடு கையில் வாங்கி வைத்திருந்தார்கள். (பசங்க படம் போடமாலா என்று நினைத்து, அவரிடம் அனுமதி வாங்கிவிட்டு போடலாமென்று இந்த பதிவில் போடவில்லை)

சிறிது நேரத்தில் பெருங்கூட்டம் கூடிவிட்டது.... புலவர் அய்யா, கவியாழி கண்ணதாசன், பாலகணேஷ், சத்ரியன், அஞ்சாசிங்கம், ஆரூர் மூனா செந்தில், மதுமதி, பிலாஸபி பிரபாகரன், மெட்ராஸ்பவன் சிவக்குமார், கேபிள் சங்கர், தமிழமுதன், டிஎன் முரளிதரன், பெண்பதிவர்கள் சசிகலா, தமிழரசி, பத்மா நாரயணன், வெண்ணிலா, சாகிதா, செல்வி சமீரா,  மற்றும் எனக்கு அறிமுகமில்லாத நண்பர்கள் சிலர் வந்திருந்தனர்.

புக் வெளியிட்டு பேசுவதற்கு நமது சக பதிவர் நண்பர் புதுகை அப்துல்லா அண்ணேன் வருவதாக இருந்தது, அவர் வீட்டி முதல் நாள் இரவில் துக்கம் நிகழ்ந்துவிட்டதால், ஊர் சென்று விட்டார், அவரால் கலந்து கொள்ள முடியாத நிலை.

எனவே இன்ஸ்டண்ட் உப்புமா போல், பதிவுலகின் உச்சம் பதிவர் கேபிள் சங்கர் அவர்களை அழைத்து புக் அறிமுகம் செய்து வெளியீடு செய்யப்பட்டது. கேபிள் வெளியிட புலவர் மற்றும் பெண்பதிவர்கள் புத்தகத்தை பெற்றுக்கொண்டார்கள். சத்ரியன் புத்தகம் பற்றி சிறிது பேசிவிட்டு நன்றியுரை ஆற்றினார்.

பின் அணைவரும் பக்கத்தில் உள்ள ஜூஸ் கடைக்கு பயணமானோம். கூடியிருந்தது 25 பதிவர்கள் எண்ணிக்கையில் இருக்கும், ஆனால் ஜூஸ் எண்ணிக்கை 50ஐயும் தாண்டிக் கொண்டிருந்தது,  

நான் ஒரு ஜூஸ்தான் குடித்தேன். 

 எப்படித்தான் இப்படி எல்லா வெரைட்டி ஜூஸ்களையும் ஒரே நேரத்தில் குடிக்கிறார்களோ!!! தெரியவில்லை :-))), அதுவும் சக பதிவர் வாங்கிக் குடுத்தால் மொட்டைதான் :-)))

இதில் பத்மா அக்கா மூன்று ஜூஸ் குடித்தார்கள், ஆப்பிள், ஆரஞ்சு & லிச்சி ஜூஸ், டேஸ்ட் எப்படி இருக்கிறது என்று செக் செய்தார்களாம் :-))
பத்மா அக்கா ரெண்டு ஜூஸ்களுடன், முடித்துவிட்டு முன்றவது ஜூஸ் குடித்தார்  :-))


பிலாஸபி பிரபாகரன் நான்கு ஜூஸ் என்று நினைவு, மெட்ராஸ் ரெண்டு, ஆரூர் மூனறா நான்கா என்று நினைவில்லை. செல்வின் ஓரத்தில் ரெண்டு ஜூஸ் கிளாசுடன் நின்றிருந்ததைப் பார்த்தேன் அது எத்தனையாவது ரவுண்ட் என்று தெரியவில்லை.

பெண்பதிவர்கள், ஜூஸ் பத்தவில்லை, நாங்கள் பக்கத்து ரெஸ்டாரண்ட் செல்கிறோம் வருகிறீர்களா என்று கூப்பிட்டார்கள், கைப்புள்ள சிக்கிறாத என்று உள்மனது விசில் அடித்ததால்,  நீங்க போயிட்டிருங்கக்கா பசங்க கூப்பிடுறாங்க என்று அவ்ர்களை அனுப்பிவிட்டு மறுபடியும் பசங்களோடு புக் ஸ்டால்கள் பயணம்.

நேற்றுதான் நாங்க ஐவரும் சேர்ந்து ஒரு ஸ்டால் விடாமல் விஜயம் செய்தோம். ஆரூர் மூனா செந்தில் சுமக்க முடியாத அளவுக்கு ( அவர் சைசுக்கு சும க்க முடியாத அளவுனா அது எம்புட்டுனு நீங்களே கணக்கு போட்டுக்குங்க மக்களே) புத்தகங்கள் வாங்கி விட்டார், என் கைகளில்ம் மூன்று பைகள் ஆகிவிட்டது.



சுயமரியாதை ஸ்டாலில் நாற்காலி போட்டிருந்ததால் நான் அதிலொன்றில் அமர்ந்தேன், பக்கத்து சேரில் திக கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர், புத்தக கண்காட்சி பயனுள்ளதாக இருந்ததா உங்களின் கருத்து என்ன என்ற கேள்வியுடன் உரையாடலை ஆரம்பித்தார்.... அது முடிவில் பெரியார் கொள்கைகள் மற்றும் அதன் தொடர்ச்சியாக இன்றைய காலகட்டத்தில் எப்படி இருக்கிறது,  பெரும்பாலும் இன்று அவருடைய கொள்கைகளை அரசியல் மற்றும் சொந்த நலன் வேண்டி தற்போதைய அதன் தலைவர்கள் நீர்த்துப் போகச் செய்து விட்டார்கள்,  பெரியாரின் அடிபப்டையான சமூக சீர்திருத்தக் கருத்துகளுக்கு மக்களிடம் அமோக ஆதரவிருந்தாலும் அந்தக் கொள்கைகளை தற்போதைய யதார்தத்தில் எந்தளவுக்கு சரியாக பரப்புரை செய்கிறார்கள் என்கிற ரீதியில் இருந்தது.


ஆனால் கட்சியின் மாநில பொறுப்பில் உள்ள ஒருவர் எந்த ஒரு ஈகோவும் இல்லாமல் தோளில் கைபோட்டுக்கொண்டு சரிசமமாக அவரின் கருத்துக்களை அழகாக பேசினார். அவர் பேசியது வெகு யதார்த்தமாக , இருக்கும் பிரிச்சினைகளின் அடிப்படையில் அதற்கான தீர்வாக ஒன்றைவைத்து போராடும் பெரியாரின் பேச்சுக்களின் சாரம் இருந்தது. அவருக்கு நன்றிகள் பல. அவரிடம் விடைபெற்று வெளியில் உள்ள மெடை அரங்குக்கு வந்தோம்.


சிறிது இளைப்பாறல் வைகோ பேசுவதாக இருந்தது , அங்கே அதற்காக அங்கே இளைஞர்கள் அதிகமான விகிதாச்சாரத்தில் அவரை எதிர் பார்த்துக் காத்திருப்பதாகவே பட்டது.
பிலாசபி பிரபாகரன், நான், அஞ்சாசிங்கம் செல்வின் & ஆரூர் மூனா செந்தில். ப்டம் பிடித்தது மெட்ராஸ்பவன் சிவக்குமார்.மேடைக்கு முன், நடந்து  கால் வலித்ததால் கொஞ்சம் ஓய்வு :-)))


வைகோவின் வரவை எதிர் பார்த்து! அரங்கில் கூட்டம்.

கைல இருக்கிற மொபைல் போனை வச்சிகிட்டு வளைச்சி வலைச்சி போட்டோ எடுத்துகிட்டேன் இருந்தான் சிவக்குமார், காமிக்கச் சொன்னா காமிக்கலை. அங்கே இருந்த ஒரு பெண் முறைக்கவும் ஓடிவந்து என் பக்கத்தில் அமர்ந்தார் என்பதை, நான் பொதுவெளியில் சொல்ல விரும்பவில்லை.

இடையில் YMCA கேண்டீன் விஜயம், காபி பிஸ்கட்ஸ், ஆரூர் கலராக இருக்கிறதே என்று நீலக்கலர் எனர்ஜிட் டிரிங் வாங்கி, அதை ஒரு வாய் குடித்து விட்டு முகத்தை அஷ்டகொணலாக்கிக் காட்டியது சுவாரஸ்யம். மனுசன் இனிமேல் கிரிக்கெட் பார்க்கும் போது பயபுள்ளைக கலர்கலரா கலர் குடிப்பதைப் பார்த்து இனிமேல் சிரிப்பார் :-))

திரும்பும் முன் பார்பி & பென் டென் பொம்மை மறக்காமல் ( ஞாபகப் படுத்திய பிலாசபிக்கி நன்றி) வாங்கியாகிவிட்டது. வீட்டில் வந்து சுவற்றில் ஒட்ட குழந்தைகளுக்கு மகிழச்சியில் துள்ளிக் குதித்தார்கள்.
வீட்டில் வந்து சுவற்றில் ஒட்டப்பட்ட பார்பி & பென்டென் பொம்மைஸ்.



இப்படியாக நேற்றைய புத்தகக் கண்காட்சி விசிட் இனிதே முடிந்தது.



January 13, 2013

சென்னை புத்தகத் திருவிழாவில்....



36-வது சென்னை புத்தகத் திருவிழா 2013






வீட்டிலிருந்து மாலை 3 மணி சுமாருக்கு கிளம்பி 4 மணிக்குள் ஸ்டால் இருக்கும் இடம் சேர்ந்துவிட்டோம். இடையில் வண்டி நிறுத்த 10 நிமிடத்திற்கு மேல் ஆகிவிட்டது, பார்க்கிங் ஃபுல். 

ஸ்டால் இருக்குமிடம் போகும் வழியிலேயே சிறுவர்களை ஈர்க்கும் விதமாக கார்டூன் கதாபாத்திர டிசைன்கள் ஓரமாக வைத்து விற்றுக்கொண்டிருந்தார்கள், வீட்டில் எதுவும் கேக்கமாட்டோம் என்றவர்கள், அங்கேயே பிள்ளையார் சுழி போட்டு வாங்க வைத்தார்கள்....

ஸ்டால்கள் இருக்கும் இடத்திற்கு சற்று முன்னர் இருந்த ஆடிட்டோரியத்தில் மணிமேகலை பிரசுரத்தாரின் புத்தக வெளியீடு தொடர்பான நிழச்சி நடந்து கொண்டிருந்தது. வலைப்பதிவு நண்பர் கவியாழி கண்ணதாசன் அவர்களின் கவிதை புத்தகமும் இன்று வெளியாகிறது, அதற்கு அழைப்பும் விடுத்திருந்தார். வரும்போது அவரின் புத்தகத்தை நம் இணைய நண்பர்கள் ஒவ்வொருவருக்கும் காம்ளிமெண்டரி காபியாக ஒரு புத்தகம் அளித்தார்.


ஸ்டாலின் ஆரம்பம் கடைசி ஸ்டால் எண்ணிலிருந்து ஆரம்பித்திருந்தது... ஒவ்வொருகடையாக ஏறி இறங்க, குழந்தைகள் புத்தகம் வாங்கித்தருமாறு கேக்க ஆரம்பித்துவிட்டார்கள், குழந்தகளுக்கான கடை வரும் அப்போது வாங்கித்தருகிறோம் என்று சொன்னாலும் சமாதானமாகவில்லை.... பயந்ததுபோல் பையன் ஒரு புத்தகைத்தை கையில் எடுத்துக்கொண்டு அது வேண்டும் என்று சொல்லிவிட்டான். சரி என்ன புத்தகமென்று பார்க்கலாம், குடுடா என்று பார்த்தால்... அவ்வ்வ்வ்... அது கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் பாகம் 3.  நான் சொல்லிக் கேட்கவில்லை... வீட்டம்மனி சொல்லியும் முடியாதுனு சொன்னதில் எனக்கு மனதிருப்தி. முடிவில், கடைக்காரரை இது காலேஜ் படிக்கிறவங்க படிக்கிறது, ப்ரீகேஜிக்கி வேற கடையில் புத்தகம் இருக்கு என்று சொல்லச் சொல்லி, அவர் சொன்னதும் சமர்த்தாக குடுத்துவிட்டான்.
இனி சமாளிக்க முடியாதென்று அங்கிருந்து நேராக நம் நண்பரின், டிஸ்கவரி புக் ஸ்டால் (43& 44) சென்றோம். அங்கு குழந்தைகளுக்கான புக்ஸ் இல்லையென்று அறிந்து அதனை ஒட்டியிருந்த கடையில் புக்ஸ் வாங்கினோம்... பாப்பாவுக்கு 5 எண்ணிக்கையில், பையனுக்கு ஏற்ற புக் ஒன்றுதான் கிடைத்தது, சரி உனக்கு அடுத்த கடையில் வாங்கித்தருகிறோம் என்று சொல்லியும், அக்காக்கு மட்டும் நிறைய புக்ஸ், எனக்கு ஒன்னு மட்டும்தான்...நிறைய வேணும்னு சொல்லி ஸ்டாலை விட்டு வரமுடியாதென்று தர்ணா......


கடைசியில், கடை முதலாளி வந்து *பென்டென்* ப்ளாஷ் கார்டு செட் ஒன்றை அவனுக்கு அன்பளிப்பாக குடுத்ததும்தான்( நான் வேண்டாம் என்று சொல்லியும் அந்த அம்மனி ஆசையாக குடுக்கிறேன் என்று சொல்லி குடுத்துவிட்டார்கள்) கடையை விட்டு வெளியே வந்தான். அதை வாங்கி விலை பார்த்தால் ரூ125 என்றிருந்தது, வாங்கிய ஐநூத்தி சொச்ச மதிப்பிலான புத்தகங்களுக்கு 125ஐ லவட்டிவிட்டான், புத்திசாலிதான் :-)))


மேலும் சிலகடைகள், சென்று ஹிந்தி சொல்லித்தருவதற்கான புக் ஒன்று வீட்டம்மனி வாங்கியவுடன், வெளியே வந்து குழந்தைகளுக்கும் &அம்மனிக்கிம் ஐஸ்கிரீம், நான் ஸ்வீட் கார்ன் என்று முடித்துக்கொண்டு, இரண்டு வாட்டர் பாட்டில்கள் வாங்கி அதை கார்கோ பேண்ட் பாக்கெட்டில் செருகிக் கொண்டு மீண்டும் அரங்கினுள். எல்லாக் குழந்தகளும் பலூன் வைத்திருந்தைப் பார்த்து பைசங்களும் கேட்க, விசாரித்தால் அது Z தமிழ் ஸ்டாலில் குடுப்பதாகச் சொன்னார்கள். அங்கு சென்று நாலைந்து வாங்கி பசங்களிடம் குடுத்தோம்.


அடுத்து கிட்ஸ் புன்னகை ஸ்டால் (Kids Punnagai -  GK TREASURE FOR JUNIOR STUDENTS) , ஜனவரி மாத இதழ் வாங்கிய கையோடு வருட சந்தாவுக்கும் அப்ளைசெய்துவிட்டு ( LKG to 5th STD படிக்கும் குழந்தகளுக்கு மிகவும் பயனுள்ள இதழ்), அடுத்ததாக  விவேகானந்தர் ஸ்டால், அங்கே ஒரு 3D சாமி படம், ஒரு கோல்டு கோட்டட் பிரிண்டிங் சாமி படம், சுற்றில் தொங்கவிட புதிதாக ஒரு விவேகானதர் படம்.


பக்கத்து ஸ்டாலில்(ஊட்டி ஸ்டால்) சமையல் தொடர்பான பொருகள் வைத்திருந்தார்கள். அதில் பட்டை, சோம்பு,மிளகு, சீரகம்னு  எல்லாத்திலேயும் ஒரு பாக்கெட் பார்சேல்ல்ல்ல் :-)))


சரி அடுத்து எந்தக்கடை என்று யோசித்துகொண்டே நகர்ந்த போது போன் மணி அடித்தது, கையில் பிடித்திருந்த பையனின் விரலை நழுவவிட்டு போன எடுத்தால் அஞ்சா சிங்கம் செல்வின். நாங்களும்  அரங்கில் தான் இருக்கிறோம் என்று. நான் நிற்கும் இடம் சொல்லிவிட்டு, போனை அணைத்து (30 செகண்ட் பேசியிருப்பேன்), சரி வாடா போலாம் என்று திரும்பி பார்த்தால், பையனைக்காணோம்...........


*10 நிமிடத்தில் அறிவிப்பு செய்யிம் இடத்தில் செய்த அறிவிப்பில் அங்கே சென்று அழைத்து வந்தோம். அந்த பத்து நிமிட பரபரப்பு.....  பிலாஸபி பிரபாகர், மெட்ராஸ் பவன் சிவக்குமார் என்று நண்பர்களும் ஓடியாடியது.... தனியாக எழுதுகிறேன்...*


பையனுக்கு என் மேல் சரியான கோபம். 10 நிமிடம் செலவளித்து பின் சமாதானம். சகஜமாக சிரிக்க ஆரம்பித்தான்.


மறுபடியும் டிஸ்கவரி ஸ்டால்... அங்கு பிளாக் & பிளஸ் நண்பர்கள் ஓவ்வொருவராக வர களைகட்டியது... வீட்டம்மனிக்கி எல்லோரையும் அறிமுகம் செய்து வைத்தேன்,  ஒதுங்கி நிற்காமல் அனைவருடனும் பேசிக்கொண்டிருந்தாள்.( நண்பர்களை பார்க்கத்தான் இங்கே கூப்பிட்டு வந்தீர்களா, எங்களுக்காக என்று பொய் சொன்னீர்களா என்று கேள்வி,அப்படி இல்லையென்றேன்), கிளம்புவதற்கு சற்று முன் மணிஜி அண்ணேன் மகளுடன் வந்திருந்தார் அவருடன் சிறிது அலவலாவல்.

கிளம்பும் முன் அனைவரையும் பார்த்து ஒரு நாள் வீட்டிற்கு அனைவரும் வாருங்கள், என்று அம்மனி அழைப்பு விடுத்தார்கள், அதற்குள் ஒரு அந்நியோன்யம் ஆகிவிட்டிருந்தார்கள், என்னிடமும், ஒரு நாள் அனைவரையும் அழைத்துவாருங்கள் என்றார்கள். பாப்பா அனைவருக்கும் பொங்கள் வாழ்த்துகள் சொன்னாள்.


அனைவரிடமும் விடைபெற்றுக்கொண்டு, வரும் வழியில் வடபழனியில், நாளை பொங்கள் வைக்க மண்பானை ஒன்றும், மண் அடுப்பு ஒன்றும் வாங்கிக் கொண்டு வீடு வந்தாயிற்று.


குழந்தைகள் அவர்களுக்காக வாங்கி வந்த புத்தகங்களை விரித்து வைத்துக்கொண்டு.... இன்று இரவு 1 மணிக்கு மேல்தான் தூங்கச் சொல்வார்கள் என்று நினைக்கிறேன்......


புத்தகக் திருவிழா விசிட் பசங்களுக்கு மிகவும் பிடித்தமானதாகிவிட்டது....................


டிஸ்கி : வீட்டம்மனி முன் பதிவர் நண்பர்கள் என்னை தொடர்ந்து கலாய்த்ததை, அம்மனியும் அவர்களுடன் சேர்ந்து கொண்டு என்னை கலாய்த்ததை எழுதாமல் மறைத்து விட்டேன்)


என்றும் அன்புடன்

LinkWithin

Related Posts with Thumbnails